<$BlogRSDUrl$>

Wednesday, June 29, 2005

அப்துல்கலாமின் கல்லூரி நண்பர்

இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர் திரு.சம்பத்குமார். இவர் விடுதியில் கலாமுடன் ஒரே அறையில் தங்கியும் இருந்திருக்கிறார். அடுத்த வாரம் கோவைக்கு வரும் கலாம் இவரின் வீட்டில் விருந்து சாப்பிடப் போகிறார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கலாமுக்குத் திருமணம் செய்யும் எண்ணம் இருந்ததாம். அவர் சொல்லும் பழைய நினைவுகள் சுவாரசியமாய் இருக்கின்றன. படிக்க விரும்புபவர்களுக்கு தினமலர்
(4) Your Comments | | | |

Sunday, June 19, 2005

முத்தொட்டில் - யாருக்காவது தெரியுமா?

அந்தக் காலத்துல இந்த முத்தொட்டிலுக்கு ஆசைப்பட்டவர்கள் பலர். அந்தக் காலம் என்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இல்லை. ஒரு ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னால்தான். பலர், குறிப்பாய் ஆண்கள் இதைப் பெரிய பெருமையாய்க் கருதினர், பெண்களும்தான். இம்மாதிரி முத்தொட்டில் போடுவது மிகவும் அபூர்வமான ஒன்றாய்க் கருதப்பட்டதாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் பெருவிருப்பம் கொண்டிருந்தோரில் பலர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது :-).

சரி. முத்தொட்டில் என்பது என்னவென்று சொல்லாமலே நீட்டி முழக்கிக்கொண்டு போகிறாயே என நீங்கள் நினைப்பது புரிகிறது. முத்தொட்டில் என்பது வீட்டில் மூன்று தொட்டில் கட்டியிருப்பதுதான். இதில் என்ன பெரிய விஷேசம் என்று நினைக்கத் தோன்றலாம். யார் நினைத்தாலும் மூன்று தொட்டில் வீட்டில் கட்டிக்கொள்ளலாமே எனக் கேட்க நினைப்பவர்கள் அடுத்தவரியைப் பார்த்துவிட்டுக் கேளுங்கள். மூன்று தொட்டிலிலும் குழந்தை இருக்கவேண்டும். அதுவும் மூன்றுபேரின் குழந்தைகளாய். அம்மா, மகள், மருமகள் என மூன்று பேரும் அவரவர் கணவர்மார்களுடன் ஒரே சமயத்தில் தத்தமது குழந்தையைத் தாலாட்டுவதே இதன் சிறப்பம்சம். ஆண்கள் ஏன் இந்த முத்தொட்டில் மீது ஆர்வமாய் இருந்தனர் என்று இப்போது புரியும். இந்தியாவின் மக்கள்தொகை இந்த அளவுக்கு இன்று இருப்பது ஏனென்றும் கொஞ்சம் புரியும்.

சரி. அது போகட்டும். இப்போதும் யாராவது இந்தியாவில் முத்தொட்டிலில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை. வெளிநாட்டில் இது பெரிய விதயமில்லை. ஆனால் வெளிநாட்டுப் பெண்கள் ஐம்பது வயதுக்குமேல் குழந்தை பெறுவதைப் பெருமையாய் நினைக்கிறார்கள்.
(7) Your Comments | | | |

Saturday, June 18, 2005

டாவின்ஸி

கீழேயுள்ளவர்தான் மோனலிசா வரைந்தவர். இத்தாலியின் மிலனோ நகரில் பல காலம் தங்கியிருந்திருக்கிறார். நாங்கள் நண்பர்களுடன் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் மிலனோ சென்றிருந்தபோது எடுத்த புகைப்படம் இது. ஆங்.. சொல்ல மறந்துவிட்டேன், திருமதி சோனியாவின் சொந்த ஊர் இதுதான். சொந்த ஊர் என்றால் இந்த ஊர் முழுவதும் அவருக்குச் சொந்தமென அர்த்தம் கொள்ளவேண்டாம், அவர் பிறந்து வளர்ந்தது இங்கேதான் என்று சொல்ல வந்தேன்.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com


ஓவியங்கள் தவிர பொறியியல், மருத்துவம், அறிவியல் என பல துறைகளிலும் புகுந்து விளையாடிய டாவின்ஸி ஒரு விஞ்ஞானியாக அக்காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை, காரணம், அவர் கணிதம், லத்தீன் ஆகியவற்றில் முறையான கல்வித்தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதுதானாம். இது எல்லாக்காலத்திலும் நடக்கக்கூடியதான், இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. கலாம் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அறிவியல் கழகம், பெங்களூரில் பேராசிரியராக வர விரும்பியபோது அங்கு பேராசிரியராய் வருவதற்கு என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முறையான தகுதிகள் பற்றிச் சில பேராசிரியர்கள் கேள்வி எழுப்பியதால் அவர் அங்குப் பேராசிரியராய் வருவதில் தடங்கல் ஏற்பட்டதாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கலாமைப் பேராசிரியராய்ப் பெற்று அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றுவிட்டது.
(1) Your Comments | | | |

அன்னியன்

இப்போதுதான் இப்படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டு வருகிறேன். கிட்டத்தட்ட சந்திரமுகி கதைதான். ஷங்கர் ஏன் சந்திரமுகி படத்துடன் இதை வெளியிடவில்லை என்பது இப்படத்தைப் பார்த்தவுடன் அனைவருக்கும் புரியும். நம்ம அல்வாசிட்டி விஜய் ஏற்கனவே கதையைச் சொல்லிவிட்டார். திரும்ப அதையே நானும் சொல்லிப் போரடிக்க விரும்பவில்லை.

நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொதித்த அம்பி என்ற சாதுவான விக்ரம் அன்னியன் என்ற மனிதனாய் பிளவாளுமை கொள்கிறார். தவறு செய்தவர்களை நரகத்தில் கொடுக்கும் தண்டனைகள் என கருடபுராணத்தில் சொல்லியிருக்கும் தண்டனைகளைக் கொடுத்துக் கொல்கிறார். ஒருத்தரை மசால்பூசி எண்ணெயில் வறுத்தெடுக்கிறார். இன்னொருத்தரை அட்டைப்பூச்சிகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சவைத்துக் கொல்கிறார். எருமை மாடுகளை மிதிக்க வைத்தும் ஒருவரைக் கொல்கிறார். இப்படி விதவிதமாய்க் கொலை செய்கிறார்.

கொலை செய்வதைக்கூட ஒத்துக்கொள்ளாலாம், ஆனால் பலவற்றை இன்னும் கொஞ்சம் யதார்த்தமாய்க் காட்டியிருக்கலாம். பிளவாளுமையிலிருக்கும்போது அன்னியன் கிட்டத்தட்ட 100 கராத்தே(?) வீரர்களை தூக்கிப் பந்தாடி அவர்களைப் பறக்கவிடுவது எல்லாம் ரொம்ப ஓவர். ரஜினி அவ்வாறு பறந்து பறந்து அடிப்பதில் நியாயம் இருக்கிறது. எல்லாரும் இதையே செய்தால் எப்படி? :-).

சதாவைக் காதலிக்க ரெமோ என்ற இன்னொரு பிளவாளுமையாகவும் உருவெடுக்கிறார். ஐஸ்-க்குள் உறைந்திருக்கும்போது ( அட.. இது நிஜ ஐஸ் கட்டிங்க) திடீரென அப்பாவி அம்பி அன்னியனாய் மாறி கட்டியைத் தூள்தூளாய் உடைத்துக்கொண்டு வெளியே வந்து பிரகாஷ்ராஜின் எலும்பை உடைத்து மாவுக்கட்டுப் போடவைப்பது எல்லாம் கூட கொஞ்ச அதிகம்தான்.

கடைசில் கோர்ட் அவரைச் சட்டப்படி தண்டிக்கமுடியாததால் குணப்படுத்தும்வரை பாதுகாப்பாய் வைத்திருக்கிறார்கள். இரண்டு வருடத்தில் குணமாகிவிட்டார் என்று நினைத்து வெளியே விடும்போது இதுபோல் இன்னொரு குற்றம் செய்த நபரை ஓடும் ரயிலில் கொன்று வீசுவதுடன் அல்லது வீசிக்கொல்வதுடன் படம் முடிகிறது.

ஏகப்பட்ட காசைக் கொட்டி எடுத்திருக்கிறார்கள். விவேக் காமெடி ரசிக்கும்படி இருக்கிறது. பிரகாஷ் ராஜ் வழக்கம்போல நன்றாய் நடித்திருக்கிறார். சதாவின் நடிப்பும் பரவாயில்லை. கதை மொத்தமே அரைப்பத்திதான். இந்தியன், ஜெண்டில்மேன், நான் சிவப்பு மனிதன் என இதே கதையை இன்னும் எத்தனைநாள்தான் புதுமொந்தையில் பழைய கள்ளாய்த் தருவார்களோ தெரியவில்லை.
(26) Your Comments | | | |

Thursday, June 16, 2005

தென்னிந்தியச் சந்தேகங்கள்

இந்தியாவின் வடமாநில மக்களுக்குக் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வருவோர் எல்லாமே ஒன்றுதான். எல்லோரையும் மதராஸி என்றுதான் அழைப்பது வழக்கம். இன்னும் நிறையப் பேர் அங்கு மெட்ராஸ் என்பது ஒரு மாநிலம் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த மத்தியப் பிரதேச நண்பர் ஒருவர் தென்னிந்தியர் என்றாலே தமிழர்கள் என்றுதான் பொருள் என்பார், தென்னிந்தியா என்றால் தமிழகத்தைத் தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்கள் இருக்கின்றன என்ற உண்மை ஆய்வு செய்துகொண்டிருக்கும் அவருக்குக்கூட உணரப்படுவதில்லை. ஏன் இப்படி என்று எனக்குப் புரியவேயில்லை.

சரி. கிட்டத்தட்ட இதுபோல் இன்னொரு சந்தேகமும் எனக்கு உண்டு. ஈழத்து நண்பர்களில் பெரும்பாலோர் தமிழகத் திரைப்படங்கள் பற்றிச் சொல்லும்போது தென்னிந்தியப் படங்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். தென்னிந்தியப் படங்கள் என்றால் அது மலையாள, கன்னட, தெலுங்கு மொழிப் படங்களையும் சேர்த்தே குறிக்குமென அவர்கள் உணர்ந்தே சொல்கிறார்களா என்று தெரியவில்லை. இன்னும் சில ஈழத்து நண்பர்கள் "தென்னிந்தியத் தமிழ்த்திரைப்படங்கள்" என்று ஒருகுழப்பம் தரும் வகையில் கூறுகிறார்கள். "வடஇந்தியத் தமிழ்த்திரைப்படம்" என்ற ஒரு பிரிவு இருந்தால்தானே இப்பெயர் சரியானது?, அல்லது தமிழ்நாட்டைத் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் எங்காவது தமிழ்த் திரைப்படம் தயாரிப்பார்களானால் இப்பெயர் சரிதான். ஆனால் அப்படி ஏதுமில்லாதபோது "இந்தியத் தமிழ்த்திரைப்படங்கள்" அல்லது "தமிழகத் திரைப்படங்கள்" என்ற பெயர்தானே சரியாய் வரும்?. ஈழத்தவர்கள் மேற்கூறியவாறு சொல்லாமல் ஏன் முதலில் சொன்னவாறு சொல்கிறார்கள் என்ற பெரிய குழப்பம் வெகுநாட்களாகவே எனக்கு உண்டு.
(7) Your Comments | | | |

Wednesday, June 15, 2005

புதுப் பார்வை - தமிழ்நாடும் சினிமா மோகமும்

தமிழக மக்கள் சினிமாக்காரர்களின் மீது தீவிர மோகம் கொண்டவர்கள் என்ற ஒரு கருத்து நெடுங்காலமாய் நம்பப்பட்டுவருகிறது. அது உண்மைதானா?. சினிமாவில் பிரபலமானால் மட்டும் தமிழ்நாட்டின் முதல்வராக ஆகிவிடமுடியுமா?- இதற்குக் கொஞ்சம் ஆழ்ந்து நிதானமாய்ச் சிந்தித்துப்பார்த்தால் "இல்லை" என்பதே பொருத்தமான விடையாக வரும்.

இதைப்படித்தவுடன் இன்றைய, நேற்றைய தமிழக முதல்வர்களை எடுத்துக்காட்டாய்ச் சொல்லி இதை மறுக்கத் தோன்றலாம். ஆனால் உண்மையின் மறுபக்கத்தைத் தவறவிட்டுவிடுகிறோம். அந்த உண்மைதான் என்ன?. முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர் அனைவரின் அரசியல் செல்வாக்கும் ஒரு கட்சியிடமிருந்து வந்ததேயாகும். அரசியல் செல்வாக்கு என்பதும் மக்களுக்குத் தெரிந்த பிரபலம் என்பதும் வேறு வேறு. இதைப் புரிந்துகொண்டவர்கள் மிக அதிகமானோர் அல்லர். ரஜினி எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்குச் செந்திலும், கவுண்டமணியும் பிரபலம். அதே அளவுக்குப் பழைய நடிகர்கள் அத்துணை பேரும் பிரபலம். ஆனால், இவர்களின் அரசியல் செல்வாக்கு என்பதற்கு இந்தப் பிரபலத் தன்மை பெரும்பாலும் உதவுவதில்லை. இதை ஏன் பெரும்பாலோர் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்?.

எம்ஜிஆர் தமிழக மக்களிடம் புகழ்பெற்றது திரைப்படத்தால் மட்டுமே. இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அவர் அரசியலில் செல்வாக்குப் பெற்றது திரையால் மட்டுமே அல்ல. முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பின்புலம் மட்டுமே அவரின் அரசியல் செல்வாக்கிற்கு முதுகெலும்பாய் இருந்தது என்பதைப் பலரும் தவறவிட்டுவிடுகிறோம். ஏனென்றால் எம்ஜிஆர் என்றவுடன் நினைவுக்கு வருவது அவரின் சினிமாக்கள்தான். இதுவே உண்மையை நம்மையறியாமல் நமக்கு திரையிட்டு மறைத்துவிடுகிறது.

இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்குக் காரணம் திரைப்படங்கள்தாம். ஆனால் அவரின் அரசியல் செல்வாக்கு எம்ஜிஆர் என்ற முன்னாள் முதல்வரின் செல்வாக்கிலிருந்து வந்ததேயாம். சந்தேகமிருப்பவர்கள் ஜெயலிதா சந்தித்த முதல் தேர்தலை நினைத்துப்பாருங்கள். அதில் ஏன் அவரால் வெற்றி பெறமுடியவில்லை?. ஏனென்றால் எம்ஜிஆரின் அரசியல் பின்புலம் அன்று இரண்டாய்ப் பிரிந்திருந்தது, அதுவே தோல்விக்குக் காரணம். ஆனால், ஜெயலலிதாவின் அடுத்த தேர்தல் வெற்றிக்கு அவருக்குக் கிடைத்த எம்ஜிஆரின் இரட்டை இலையும், அதிமுக என்ற எம்ஜிஆரின் கட்சிப் பெயரும்தான் அடிப்படை. இன்று அவர் அரசியலில் ஆழ வேருன்றியதால் அவருக்கு எம்ஜிஆரின் பெயர் தேவையில்லை. ஆனாலும் இந்த அதிமுக என்ற பெயரும், இரட்டை இலை என்ற சின்னமும் மிக முக்கியம்.

இதே ஜெயலிதா அதிமுக என்ற பெயரில்லாமல், எம்ஜிஆர் என்ற பின்புலமில்லாமல் தனிக்கட்சி ஆரம்பித்திருந்தால் அவரின் நிலை என்னவாயிருக்கும்?. சந்தேகமே வேண்டாம். மற்ற நடிகர்களுக்கு ஏற்பட்ட கதிதான். அவரின் அரசியல் வெற்றிக்குச் சினிமா காரணமில்லை, எம்ஜிஆரின் பின்புலம்தான் காரணம் என்பது இப்போது நன்றாகவே விளங்கும்.

சரியான அரசியல் பின்புலமில்லாமல் சினிமாப் பிரபலத்தனமை மட்டுமே போதுமென நினைத்து அரசியலில் இறங்கிய யாரும் தமிழகத்தில் வெற்றி பெற்றதே இல்லை. ஏனென்றால் சினிமாப் பிரபலத் தன்மை என்பது வேறு, அரசியல் செல்வாக்கு என்பது வேறு. இதை மறந்தோரின் கதி கதோகதிதான். அவ்வாறு இறங்கிப் பட்டவர்கள் பலர் தமிழ்நாட்டில் உண்டுதானே?.

எம்ஜிஆர் அளவுக்கு திரையில் பிரபலமான சிவாஜி கணேசன்( இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆரை விட இவருக்குப் பல மட்டத்தில் சினிமா ரசிகர்கள் அதிகம்), பிரபல கதாநாயகர்களான ராஜேந்தர், பாக்யராஜ் இன்னும் பலர் ஏன் வெற்றி பெற முடியவில்லை?. காரணம் அவர்கள் திரையால் வந்த பிரபலத் தன்மை போதுமென நம்பிக் காலைவைத்தார்கள். இத்தனைக்கும் இவர்களில் சிவாஜி காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலத்தைக் கொஞ்சம் கொண்டிருந்தார். தமிழகத்தில் காங்கிஸுக்கு எந்த அளவுக்குச் செல்வாக்கு இருந்ததோ அதில் ஒரு பகுதி மட்டுமே அவருக்கு அரசியலில் கிடைத்தது. அதைவிட அதிகமாய் அவருக்குக் கிடைக்கவில்லை.

இந்தியாவிலேயே தனது சினிமாப் பிரபலத்தன்மையை மட்டும் வைத்து அரசியல் செல்வாக்குப் பெற்றவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர். அவர் சினிமா நடிகர் என்ற நிலையைவிட்டு மேலேற்றப்பட்டுக் கடவுளாகவே வணங்கப்பட்டவர், அது ஒரு காலம் :-). அவருக்குப் பின்னால் வந்த சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்குக் காரணம் என்டிஆரின் பின்புலம்தான் என்று சொல்லத் தேவையில்லை. இந்த ஒரு உதாரணத்தைத் தவிர்த்துத் தமிழ்நாடு உள்ளிட்ட வேறு எந்த மாநிலத்திலும் சினிமாவை மட்டும் வைத்து இதுவரை யாரும் வந்ததில்லை. இனிமேலும் யாராவது வரமுடியுமா என்பதும் சந்தேகமே.

கலைஞர் கருணாநிதியை எடுத்துக்கொண்டால், அவர் இன்றுவரை எந்தத் தேர்தலிலும் அவரின் தொகுதியில் தோற்றதில்லை. காரணம், அவரின் பலமான அரசியல் பின்புலம் மட்டுமே. வைகோ சினிமாவில் இல்லாவிட்டாலும் அவரால் பல தொகுதிகளில் வெற்றிபெற இயலுவது அவரின் அவரின் அரசியல் பின்புலத்தால்தான்.

சினிமாப் பிரபலம் என்ற மாயையை நம்பி அரசியலில் இறங்கும் நடிகர் யாராயிருந்தாலும் தமிழகத்தில் அரசியலில் வெற்றி பெறுதல் என்பது குதிரைக் கொம்பே. இதுவே வரலாறு சொல்லும் உண்மை. வரலாறு சொல்லும் உண்மைகளை, அந்தத் தவறுகளை மறந்தவர்கள் மீண்டும் தானே அத்தவறுகளைச் செய்யச் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.
(11) Your Comments | | | |

Monday, June 13, 2005

இலங்கைக்கு இந்தியாவின் ராணுவ உதவி

வலைப்பதிவுகளில் சில சமயம் முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுவது கொஞ்சம் மகிழ்ச்சியைத் தருகிறது. முகமூடி தனது வலைப்பதிவில் இந்தியா இலங்கை அரசுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தனது கருத்தையும், அதற்கான காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

இந்தியா இலங்கைக்கு ஆக்கப்பூர்வமான உதவி செய்யவேண்டும்(இலங்கை அரசுக்கு மட்டுமல்ல). மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை எந்த நாடு யாருக்குக் கொடுத்தாலும் அது பெரும் கொடுஞ்செயலேயாகும்.

தனது நாட்டின் மக்கள் அனைவரையும் சமமாய்ப் பார்க்கத் தெரியாத ஒரு அரசாங்கத்தின் குரூரமுகம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இலங்கையை விட சிறந்த உதாரணத்தைத் தேடித்தான் பார்க்கவேண்டும். இலங்கை அரசின் மனதை இந்தியா குளிர்விக்க செய்த உதவிகள் பலவற்றுக்கு இலங்கை அரசு செய்த கைம்மாறுகள் சின்னக்குழந்தைக்குக்கூடத் தெரியும்.

இந்தியாவுக்கு உதவும் வாய்ப்புக்கிடைத்தபோதெல்லாம் இலங்கை அரசு எதிர்நிலையையே எடுத்திருக்கிறது. இதற்குத் தொடர்ந்து பல உதாரணங்களைக் கூறமுடியும். 1971 போரின்போது நடுநிலை வகிப்பதாய்க் கூறிக்கொண்டே பாகிஸ்தானியப் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வசதி செய்துகொடுத்ததில் இருந்து, இந்தியா ஒவ்வொரு நாளைக்கும் பல கோடிரூபாய் செலவுசெய்து அனுப்பிய அமைதிப்படையைத் திறம்படக் காய்நகர்த்தி இந்தியாவை, ஈழத்தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் எதிரானவர்கள் என்பதுபோல மாற்றியது, சுனாமி நிவாரணம் என்ற பெயரில் இலங்கையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்க முயற்சிநடப்பதுபோல் பலவற்றைச் சொல்ல இயலும். இந்திய உதவியால் உருவான வங்கதேசத்தைக் கடைசியாய் அங்கீகரித்த நாடுகளில் இலங்கை முதலிடம் வகித்தது என்பதும் இங்கு சொல்லத் தேவையில்லை. இந்தியா கச்சுத் தீவை இலங்கைக் கொடுத்தது, அதற்குக் கைம்மாறாய் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களை இதுவரை இலங்கை அரசு கொன்றிருக்கிறது(இன்னும் கொல்லும்).

இது மிக எளிய கணக்குத்தான். சின்னக் குழந்தைகளுக்குக்கூடப் புரியக்கூடியதுதான். நேற்று, இன்று, நாளை என என்றுமே இலங்கை அரசு இந்தியாவின் நலனுக்கு எதிரானதாக மட்டுமே இருக்கும். ஏனென்றால் இலங்கை அரசோ அதன் பெரும்பான்மை மக்களோ (இரண்டும் வேறு வேறானதா ? ) இன்றைய இந்தியாவுடன் எந்த விதத்திலும் தொடர்புடையவர்களாய் இல்லை. ஆனால் இலங்கையின சிறுபான்மைத் தமிழ்மக்கள் இந்தியாவுடன் நீண்டகாலத் தொடர்பினைக் கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாகக் கொண்டிருப்பவர்கள். ஈழத்தமிழர்களுக்கும், இந்திய அரசுக்குமிடையில் நிகழ்ந்த பெரிய பெரிய தவறுகள் இலங்கை அரசின் ராசதந்திரத்துக்கு மிகப் பெரிய உதாரணம். ஒரே கல்லில் பல மாங்காய் என்பதாய் அவ்வரசு நகர்த்திய காய் நகர்த்தல் தந்திரத்துக்குப் பலியானது இந்தியா மட்டுமல்ல, ஈழத்தமிழர்களும்தான். கொஞ்சம் நிதானமாய்ச் சிந்திக்கும் எவராலும் இதை எளிதாய்ப் புரிந்துகொள்ள இயலும். இவ்வளவு ஏன்?, அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்திலேயே அன்றைய இலங்கை அதிபர் இதை வெளிப்படையாய்ச் சிரித்துக்கொண்டே சொன்னார்தானே.

இந்தியா இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும், நாளை இந்தியாவுக்கென ஒரு இக்கட்டான நிலை வந்தால் இலங்கை அரசு எதிர்நிலையையே எடுக்கும் என்பது கடந்த காலத்தைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்த எவருக்கும் புரியும்.
(14) Your Comments | | | |

Wednesday, June 08, 2005

பையனுக்குக் காது குத்தினா தப்பா?

குழந்தை நடக்க ஆரம்பிக்கும் முன்பே அதற்குக் காதுகுத்தி கடுக்கன் போட்டுப் பல நூற்றாண்டாய் அழகு பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒருத்தர் தன்னோட 2 வயது பையனுக்குக் காதுகுத்த ஆசைப்பட்டுச் செய்ய அது பலரின் விமர்சனதுக்குள்ளாகியிருக்கிறது. குழந்தை அனுமதியில்லாமல் அதற்கு காதுகுத்துவது நியாயமானதல்ல என்று நிறையப் பேர் விமர்சிக்கிறார்களாம். இது நடந்தது பிரபல கால்பந்தாட்ட வீரர் பெக்காமிற்குத்தான்( அடடே.. Bend it Like Beckham அப்படின்னு ஒரு படம்கூட வந்ததே).

ஒருவாரத்துக்கு முன்னால் தலைமுடியை பின்னால் இழுத்துக் கட்டிப் பையன் காதில் இருக்கும் கடுக்கன் தெரியுமாறு பத்திரிக்கையில் வந்த நிழற்படம்தான் இவற்றுக்கெல்லாம் காரணமாய் இருந்திருக்கிறது. இதுபோல் காதுகுத்துவது சரியா தவறா என இணையத்தில் வாக்கெடுப்புக்கூட நடக்கிறது, இதுவரை ஆறாயிரம்பேருக்கு மேல் ஓட்டும் போட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

உலகத்துல ஒருசில இடத்துல பையன், பொண்ணுக்குக் கல்யாணம் முடிக்கக்கூட அவங்க சம்மதத்தைக் கேட்குறதில்லை, இதைப்போய் ஒரு பெரிய விஷயமாய் பேசுறாங்களே அப்படின்னு நீங்க நினைக்கலாம். இருந்தாலும் குழந்தைக்கு அதோட சம்மதம் இல்லாம காதுகுத்துறது தப்புத்தானோன்னு சந்தேகம் வர ஆரம்பிக்குது. அது போகட்டும், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு மறக்காம ஒரு வரி சொல்லுங்க.

சுட்டி 1
சுட்டி 2
(11) Your Comments | | | |

Monday, June 06, 2005

முற்றுகையிடப்பட்ட ஜெயகாந்தன்

தமிழில் பேசாமல் சமஸ்கிருதத்தில் பேசுமாறு ஜெயகாந்தன் முற்றுகையிடப்பட்டார். கோயம்புத்தூரில் நடந்த பாராட்டுவிழாவில் இச்சம்பவம் நடந்தது. தட்ஸ் தமிழ்
(4) Your Comments | | | |

Sunday, June 05, 2005

பேய்கள் நடமாடும் இரவில் நான்....

பேய்களும், காட்டேறிகளும் வந்திருந்த ஒரு இரவு விருந்தில் நான் கலந்துகொண்டேன். கீழேயுள்ள படம் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் அங்கே எடுத்தது. ஹலோவீன் விருந்து என்ற பெயரில் இப்படியான கூத்துகள் நடக்கின்றன. நீங்கள் காணும் படத்தில், நடுவில் சக ரத்தக் காட்டேறியுடன் இருக்கும் பேய் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். :-).

Image hosted by Photobucket.com
(11) Your Comments | | | |

Saturday, June 04, 2005

ஆழ்மனதின் ஆழத்தில்

Image hosted by Photobucket.comஒட்டுதல், கலத்தல், பரிமாற்றமடைதல் போன்ற சுவாரசியமான அம்சங்கள் உலகை அர்த்தமுள்ளதாய் ஆக்குகின்றன. இரண்டு தனியான பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவது மட்டுமல்ல ஈங்கு குறிப்பது. மாறாக, பாலில் கலந்திருக்கும் நீரைவிடுத்து பாலை மட்டும் தனியாய்ப் பிரித்தெடுத்துக்கொள்ளும் அன்னப்பறவையின் இயல்பை ஒத்து, கருத்துக்களும், எண்ணக்குவியல்களிலிருந்து சில பிறரிடமிருந்து நம்மின் மனத்தில் ஒட்டுதலே இங்கு குறிக்கப்படுவது.

எந்த ஒரு மனிதனும் தன்னந்தனியானவனே அல்லன். தானாக வந்த சுயம்புவும் அல்லன். ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசயக் கலவை. எல்லா மனிதனிலும் எல்லாமும் இருக்கிறது. ஆனால் கலவையின் சாரத்தின் விகிதாச்சாரம் ஒவ்வொருவருக்கும் மிக வேறுபடுகிறது. அவற்றில் ஆதிக்கம் செலுத்தும் குணமே அம்மனிதனின் இயல்பைப் பெரும்பான்மையாகத் தீர்மானிக்கிறது.

தான் பழகிய நண்பர்கள், பகைவர்கள், அன்னியர்கள், கேள்விப்பட்டவர்கள், கேள்விப்படாதவர்கள், குழந்தைகள், விலங்குகள், புத்தகங்கள் என அனைவரின் இயல்பிலும், அனைத்தின் தொகுப்பிலிருந்தும் எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சம் மெதுவாய் நம்மை அறியாமலே நம்மில் கலக்கிறது. ஆழமாய் நம்மை நாமே ஊடுருவிப்பார்த்தால் இதைத் தெளிவாய் உணர இயலும். ஒருவரின் பெரும்பான்மையான குணங்கள், பழக்கங்கள் தாயிடமிருந்தும், தந்தையிடமிருந்தும், நெருங்கிய நண்பர்களிடமிருந்தும், நமது மனம்கூட அறியாமல், திருட்டுத்தனமாய்ப் பாலைக் குடிக்க வரும் பூனையின் நிதானத்துடன் நேரடியாகவும், மறைமுகமாயும் வந்து சேர்ந்திருக்கிறது.

இவ்வாறு வந்து சேர்ந்த குவியல்களில் விலைமதிக்கமுடியாத வைரங்களும், மாணிக்கங்களும், தங்கப்பேழைகளும் அடக்கம். பட்டை தீட்டப்படாத வைரங்களும் நிறையவே உண்டு. குப்பைகளும், முகஞ்சுளிக்க வைக்கும் நாற்றம் தரும் அழுகிய பொருட்களும், எதற்குமே உதவாத, ஆபத்தில்லா பொருட்களும் குறிப்பிடத் தகுந்த அளவில் சேர்ந்திருக்கின்றன.

முழுவதும் சாப்பிட்டு முடித்தாலும் தட்டில் ஒட்டியிருக்கும் துண்டுப் பருக்கைகள்போல், நாம் கடந்துவந்த பாதையின் சுவடுகளும், அது ஏற்படுத்திய தாக்கங்களும் மனதில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில கண்ணிவெடிகள்போல ஆபத்தானவை, இன்னும் சிலவற்றை தூங்குகின்ற எரிமலைகளுடன் ஒப்பிடலாம். இன்னும் சில மிக இனிமையானவை, மனம் மயக்கும் வாசம் தருபவை. கொஞ்சம் சுவாரசியமற்ற வஸ்துக்களும் இங்கே உண்டுதான்.

சுவடுகள் மட்டுமல்லாமல், நமது வயதின் ஒவ்வொரு பருவமும் மீதமாய் நம்முள்ளே கலந்திருக்கிறது. ஒவ்வொருவனுக்குள்ளும் கள்ளங்கபடில்லாக் குழந்தை இருக்கிறது. மழலைமொழி பேசும் இன்னொரு குழந்தையைப் பார்த்தவுடன் மெதுவாய் விழித்தெழுந்து அதுவே மழலை மொழிபேசுகிறது. எத்தனைக் கடுமையானவனும் தனது குழந்தையைக் கொஞ்சும்போது பார்த்திருக்கிறீர்களா?, அங்கே கொஞ்சிக்கொண்டிருப்பதும், பொருளில்லா மழலைமொழியைப் பேசிக்கொண்டிருப்பதும் அவனல்ல. அது அவனில் மிச்சமிருக்கும் குழந்தை, விழித்தெழுந்து சகவயதுத் தோழனுடன் விளையாட வந்த குழந்தை.

மிக முதிர்ந்த மனிதனுக்குள்ளும், குழந்தைப் பருவம் மட்டுமல்லாது அவனின் விளையாட்டுப் பருவமும், துணைதேடும் துடுக்குத்தனமான வாலிபப் பருவமும்கூடக் கடைசிவரை கொஞ்சம் மிச்சமாகவே இருக்கிறது. உங்களுக்குள் அவை அவ்வப்போது மெதுவாய் உள்ளிருந்து குரல்கொடுத்து தமது இருப்பை உணர்த்தும். துடுக்குத்தனமான வாலிப மிச்சம் குடும்பப் படகினைக் கவிழ்க்கும் சுறாமீன்களாய் மாறுவது மிகச் சாத்தியம், இதற்கான உதாரணங்கள் சிலவற்றையாவது ஒவ்வொருவரும் அறிந்திருப்பர்.

ஒரு அழகிய, மனம் தைக்கும் கவிதையைப் படித்தவுடன் உங்கள் மனதின் ஓரத்திலிருந்து தெறிக்கும் மெல்லிய பொறாமையின் வாசத்தை உணர்ந்ததுண்டா?. இதற்கு இல்லையென பதில் சொல்பவர்கள் கவிதை படியாதவர்களாகத்தான் இருக்கவேண்டும். ஆம் என பதில் சொல்வோரே, அந்தப் பொறாமைத் துளி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நீங்கள் உணரா கவிஞனிடமிருந்து வந்தது. ஆம், அது சக கவிஞனின் படைப்பைப் பார்த்து நாம் ஏன் இதைப்போல் சிந்திக்கவில்லை என்று ஏங்கும் ஒரு கவிஞனின் ஆதங்கத்தின் வாசம். இனிய படைப்புக்கள் எவற்றை ரசிக்கும்போதும் நீங்கள் விழிப்பாயிருந்தால் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளியின் சுவடையும் உணர இயலும். (இன்னும் வரும்..)
(15) Your Comments | | | |

Friday, June 03, 2005

உளவியல் - Role Confusion

உலகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கியக் காரணம் ஒன்றே ஒன்றுதான். உளவியலில் அதன் பெயர் " Role Confusion".

ஒவ்வொரு மனிதரும் உலகில் தினம்தினம் நடக்கும் நாடகத்தில் நடிகராய் நடிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் உண்டு. சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட வேசம் கட்டுவதும் உண்டு. வேடம் கட்டுவதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினை ஆரம்பிக்கும் இடம் வேடத்தைத் தீர்மானிக்கும் நபர்கள்தாம். பெரும்பாலும் வேடத்தை விருப்பப்பட்டு நாமே தேர்வு செய்கிறோம், அது அவரின் உரிமை. ஆனால், நம்மில் பெரும்பாலோர் அடுத்தவரின் வேடத்தின்மீது ந்மது கவனத்தைத் திருப்பும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

ஒருவர் போட்டிருக்கும் வேடத்தின் தன்மை மற்றொருவருக்குப் பிடிக்காததால் வேடத்தை மாற்ற வேண்டும் என்று உடன் நடிப்பவர் அடம் பிடிக்கிறார். அதற்கு இரண்டு பேர் ஆமாம் போடுகிறார்கள். இன்னும் ரெண்டு பேர் எதிர்த்து நிற்கிறார்கள். இப்போது இருவரின் வேடத்தை மட்டும்தான் கணக்கில் எடுத்திருக்கிறோம். ஒரு பத்துப் பேரைக் கணக்கில் எடுத்தால் பெர்முடேஷன், காம்பினேஷன் என கணிதத்தினை பயன்படுத்தி கணக்கிட்டால் வரும் எண்ணிக்கையை விட பிரச்சினை பல மடங்காய் மாறியிருக்கும்.

வேடத்தின் தோற்றத்துக்கே இத்தனை பிரச்சினை வரும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்போது எப்படி நடிக்கவேண்டும், என்னவாய் நடிக்கவேண்டும் என்பதை அனைவரும் அவர்களுக்குள் தனித்தனியாய்த் தீர்மானிக்கும்போது பிரச்சினைகளின் எண்ணிக்கை உலகமக்கள்தொகையை விடப் பலமடங்கு அதிகமாகியிருக்கும்.

உலகில் தினம்தினம், நொடிக்கு நொடி எல்லா மூலையிலும் நடக்கும் பிரச்சினைகள் இந்தக் கதாபாத்திரக் குழப்பத்தால் வந்தவையே, ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் இது இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது. இன்னும் பத்தாயிரம் வருஷம் கழித்தும் இது இருக்கும்.

அடுத்தவரின் பாத்திரம் நம்மைப் பாதிக்காமல் இருந்தபோதிலும் தான் விரும்பியவாறு மாற்றச் சொல்லி அடம்பிடிக்கும் அக்கிரமக்காரர்கள் உலகின் அழிவுகளுக்கு ஆரம்பப்புள்ளியாய் இருப்பார்கள். உலகின் ஒவ்வொரு மனிதனின் மனநிம்மதிக்கும், அமைதியான வாழ்வுக்கும் இடையூறுகளாய் இருப்பவர்களும் இவர்களே. அடுத்தவரின் பாத்திரத்தைத் தீர்மானிக்கும் உரிமை தனக்கிருப்பதாய் மூர்க்கத்தனமாய், கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் செய்யும் செயல்கள்தாம் நாம் தினம் தினம் பார்ப்பது, படிப்பது, கேட்பது, சில சமயம் நாம் செய்வதும்.

நமக்குத் தெரிந்த, அறிந்த, செய்த, புரிந்த பிரச்சினைகளை இப்போது கொஞ்சம் ஒரு கணம் நமக்குள்ளேயே எண்ணிப்பார்த்து இந்த உளவியல் தத்துவத்தை நாமாகவே மதிப்பீடு செய்துகொள்ளலாம்.
(1) Your Comments | | | |

Thursday, June 02, 2005

ஹாலிவுட்- கல்லா கட்டும் இந்திய சினிமா

ஹாலிவுட் திரைப்படங்களின் அவுட் சோர்ஸிங் வேலைகள் இந்தியா பக்கம் வர ஆரம்பித்துள்ளன. குறைந்த சம்பளம், திறமையான ஆட்கள் போன்ற பல சாதகமான அம்சங்களால் பல துறைகளின் வேலைகள் வளர்ந்த நாடுகளிலிருந்து அடுத்த நாடுகளுக்கு அனுப்பப்படுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த அவுட் சோர்ஸிங் வேலைகளுக்குக் கவர்ச்சிகரமான இடமாய் இந்தியா இருந்து வருகிறது. இந்த வகையில் இப்போது ஹாலிவுட் சினிமா சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வேலைகள் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு வரத் துவங்கியுள்ளன.

இந்தியப் பாரம்பரிய கதாபாத்திரங்களின் அனிமேசன் படங்களும் ஹாலிவுட்டின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் பல பில்லியன் டாலர் வருமானம் இவ்வகையில் வரும் சாத்தியம் பிரகாசமாய் இருப்பதாய்க் கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுடையவர்களுக்காக
ரெடீஃப்
தினமலர்
சுட்டி3
சுட்டி4
(2) Your Comments | | | |

கலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு ??

மிகச் சுவாரசியமான விதயங்கள் அவ்வப்போது ஆங்காங்கே தென்படுவதுண்டு. தினகரன் - இன்று ஒரு தகவலில் வந்திருக்கும் கட்டுரை இது. படித்துப் பயன் பெருக :-)).
(21) Your Comments | | | |

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com