<$BlogRSDUrl$>

Saturday, May 08, 2004

சோதிடம் என்னும் அற்புத அறிவியல் - 2


பகுதி - 1

சோதிடம் என்பது முழுவதும் மூடநம்பிக்கை.. பிற்போக்கானது என்று கூறுவது மிக எளிதானது. இதைக் கூற எவருக்கும் முழு உரிமை உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதைக் கூறுவதற்கு முன்னர் அவருக்குச் சோதிடத்தின் அடிப்படைகள் , தன்மைகள், ஆகியவற்றைப் பற்றி அறிவுப் பூர்வமான பரிச்சயம் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய முடிவையும் எடுப்பதற்கு முன்னால் எந்தப் பக்கமும் சாயாத தராசு முள்ளின் நடுநிலைத் தன்மை அவ்விஷயத்தைப் பற்றி மனதுக்கு இருக்கவேண்டும். அதன் குணாதிசயங்கள், அதைப் பற்றிய உங்களின் சொந்த அனுபவங்கள், அந்தச் சொந்த அனுபவங்களின் உண்மையான பின்புலம், இவற்றுடன் எதையும் ஆய்வு நோக்கில் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை இவையனைத்தும் இருப்பின் ஒருவர் சோதிடம் என்பது முற்றிலும் மூடநம்பிக்கை, ஏமாற்றுப் புரட்டு என்று கூறவே மாட்டார்.

சோதிடம் புரட்டு என்ற முடிவை ஒருவர் தன்னுடைய நம்பிக்கையின் காரணமாகவோ, மெரினா பீச்சில் கையில் குச்சியுடன் குறி பார்க்கும் பெண்ணிடம் ஒரு தடவை பேசியதை வைத்தோ, தெருவில் போகும் கிளிஜோசியக்காரரிடம் சிறு வயதில் சோதிடம் பார்த்ததை வைத்தோ, தொலைக்காட்சியில் இப்போது அடிக்கடி வரும் பெயர் ராசி, அதிர்ஷ்டக்கல் என விதவிதப் பெயர்களில் அடுக்கடுக்காய் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தோ, சுயலாபத்துக்காய்ப் பித்தலாட்டம் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகளைப் பார்த்தோ, கிரிக்கெட்டில் இன்று இந்தியா ஜெயிக்குமா என்று ஒரு அறிவுஜீவி சோதிடம் சொன்னதைப் பற்றியோ நினைத்து ஒருவர் எடுப்பாரானால் அது எத்தகைய தவறான முடிவு என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்று வள்ளுவர் சொன்ன சொல் இங்கே நினைவு கூறத்தக்கது. அதற்காய் சோதிடம் என்பது ஒரு முழுமையான இயல், அனைத்தும் சரியே என்று சொல்ல வரவில்லை. முழுமையான துறை என்பதாய் உலகில் இதுவரை எதுவும் இல்லை. இன்றைய அறிவியலை எடுத்துக் கொண்டால் அதன் வளர்ச்சி தொடர்ந்ததாய், நீண்ட நெடுங்காலமாய் இருந்து வந்திருக்கிறது, அறிவியலை இன்னும் ஆயிரக் கணக்காணோர் வளர்த்துவருகிறார்கள். ஆனால் இன்றைய அறிவியலில் வளர்ச்சி, அதற்காய் செய்யப்படும் முயற்சிகளின் அளவு ஆகியவற்றை சோதிடத்துடன் ஒப்பிட்டால் சோதிடம் என்பது சில நிமிடங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை. அதன் வளர்ச்சி என்பது சொல்லிக்கொடும்படியாய் எதுவுமே இல்லை. சோதிடத்தை அனைவரும் பயன்படுத்த மட்டுமே விரும்புகிறார்கள், சோதிடத்தின் வரம்புகள், அதன் குறைகள் ஆகியவற்றை மறைக்க விரும்புவோர், குறையை மட்டுமே காட்டிக் கேலி செய்து "அறிவு ஜீவி" என்பதாய்த் தங்களைக் காட்டிக் கொள்வோர், அதைத் தங்கள் சொந்த லாபத்துக்காய்ப் பயன்படுத்த விரும்புவோர் இவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் சோதிடத்தை வளர்க்க, அதன் எல்லைகளை நீட்டிக்க ஆய்வுப் பூர்வமாய்ச் சிந்திப்பவர்களின் எண்ணிக்கை பல நூற்றாண்டுகளாய் மிகக் கொஞ்சமாகவே இருந்திருக்கிறது.

இந்த நிலையில், சோதிடத்தைப் பல்கலைக்கழகப் பாடங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரித்தது சரியே எனச் சில நாட்களுக்கு முன்னால் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சோதிடத்தைப் பற்றி ஆய்வுப் பூர்மாய்ச் சிந்திப்பவர்கள் இன்றும் கொஞ்சப் பேர் இருக்கவே செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை மனதில் எழுப்புகிறது.
| | |
Comments:
மேல் விபரங்களுக்கு
தமிழோவியம் போய் பாருங்கள்,பால பாடம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது விரும்பி படித்து வருகிறேன்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com